காவலன் படத்தைப் புறக்கணிக்க ஈழத் தமிழர் கோரிக்கை!

By The Editor, Posted on 19 Nov 2010 at 12:36pm, 0 comments, | 106 views

asin1-1

இலங்கை அரசின் ஊதுகுழலாகச் செயல்படும் அசின் நடித்துள்ள, விஜய்யின் காவலன் படத்தைப் புறக்கணிக்குமாறு, ஈழத் தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து ஈழத் தமிழ் இணையதளமான தமிழ்வின் இன்று வெளியிட்டுள்ள செய்தி:

அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே! வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன் வைக்க விரும்புகின்றோம்.

முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின். பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார்.

எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் எதுவெனில், ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரைப் பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.

இதிலிருந்தே சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

ஆம். தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதல் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருந்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.

இது நிச்சயம் அசின் என்ற ஒரு நடிகைக்கு எதிரான அல்லது விஜய்க்கு எதிரான பிரச்சாரம் அல்ல… பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.

சற்று யோசித்துப் பாருங்கள்… பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவுடன், திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்றபோது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ… ஏன் முதலமைச்சர் கூட அவர்களோடு செல்லவில்லை.

ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முழுவதும் அந்த நாட்டின் முதல் பெண்மணியான ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்ததன் மர்மம் என்ன?

அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்ய முயலும் விவேக் ஒபராய்க்கோ கூட இந்த கௌரவங்கள் வழங்கப்படவில்லையே.

அதோடு அசின் நடத்திய முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோருக்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.

இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.

இப்படப் புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம். அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக மேலும் திமிராகவே பேசி வருகிறார் அசின். உதவி செய்யவே சென்றேன் என்றவர், இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்த்தற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.

ஆனால் கூடவே, ‘தமிழர்களை சிங்கள அரசு நன்றாக பராமரிப்பதாக” வேறு நற்சாட்சிப் பத்திரம் வேறு வாசிக்கிறார்.

படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வeரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெறிவோம்..!

-இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காவலன் படம் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. விஜய்யின் தொடர் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வரை காவலனை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பெரும் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் அசின் விவகாரமும் சேர்ந்துள்ளதால், சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது, சித்திக் இயக்கியுள்ள இந்த காவலன்.

Read also
Advertisement

Leave a Reply