டெல்லி: முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையில் எடுத்த முக்கிய நியமன முடிவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நியமனங்கள் குறித்த இறுதி முடிவை இப்போது தொலைத் தொடர்புத் துறையை கூடுதலாக கவனிக்கும் அமைச்சர் கபில் சிபல் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பதவி, எம்டிஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவி, டிராய் அமைப்பின் உறுப்பினராக தொலைத் தொடர்புத் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நபர் ஆகிய பொறுப்புகளுக்கான நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்த நியமன முடிவுகள் அனைத்துக்கும் பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒப்புதல் அளித்திருந்தது.
அமைச்சரவையின் நியமனக் குழுவின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இவை அனைத்தும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.
இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, அந்த அமைச்சகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டார்.
இது கபில் சிபல் எடுத்த முக்கிய முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.
Read also- சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்... பண்ருட்டி ராமச்சந்திரன்
- 32 பற்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் நாக்கைப் போல - ஜெயலலிதா பேச்சு
- அடுத்த 10 ஆண்டுகளில் 20000 மெ வா மின்சாரம்... ஆனா ரூ 15 லட்சம் கோடி வேணும்... - ஜெ கனவு!
- இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதாட தடை
- 10 நாள் சஸ்பெண்ட்டை எதிர்த்து விஜயகாந்த் வழக்கு-சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
