டாவோஸ்: கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும் விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன. இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள் சென்சார் செய்ய வேண்டும்”, எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும், இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா… மோசமான விஷயங்களை தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு எதிராக கூகுள், யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை செய்ய முடியாது என வாதிட்டன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.
உலக பொருளாதார மாநாட்டில்…
இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ் அரோரா கூறுகையில், “இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்,” என்றார்.
மேலும் கூறுகையில், “எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத் தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப் போய்விடும் (அடடா… என்ன ஒரு அக்கறை!). மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச- மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை பொறுப்பாகாது. சர்வதேச தலைமையிடம்தான் பேசவேண்டும்,” என்றார்.
“நான் நடிச்சதிலேயே நல்ல படம் சிந்துசமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு… ஸ்கோப் இருந்துச்சு. இப்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாரா இருக்கேன். ரிலீஸ் பண்ண முடியுமா பாருங்க…”
-படத்தின் ஹீரோ சொன்னதில்லை இது. நாயகியாக நடித்த அமலா பால் தயாரிப்பாளரிடம் இப்படி கூறி வருகிறாராம்.
சிந்து சமவெளி என்பது என்ன மாதிரி படம் என்பது தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் ஒரு சின்ன பிளாஷ்பேக்…
இந்தப் படத்தில் மகன் ராணுவத்துக்குப் போய்விட, காம இச்சை கொண்ட மருமகளும் மாமனாரும் ‘சேர்ந்து’விடுவார்கள்.
இந்த அருமையான ‘குடும்ப காவியம்’ ரிலீஸ் ஆனபோது அதை எதிர்க்காத மீடியா, கட்சிகள், சமூக அமைப்புகள் இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமானது. படத்தின் இயக்குநர் சாமி, இப்படியொரு படத்தை எடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தலைமறைவானவர்தான்… இன்னும் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
படத்தின் ஹீரோயின் அமலா பால் கொஞ்ச நாட்கள் இந்தப் படம் பற்றி வாயே திறக்காமலிருந்தார். இப்போது மைனா, தெய்வத்திருமகள், வேட்டை படங்களில் பாப்புலராகிவிட்ட நிலையில், சிந்து சமவெளி குறித்துப் பேச ஆரம்பித்துள்ளாராம்.
பொதுவாக வெறும் நடிகைகள் முன்னணி நடிகை ஆனபிறகு, அவர்கள் தவறாமல் சொல்லும் விஷயம்… ‘ஒரு படத்திலாவது விலைமாது பாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பை வெளிப்படுத்த முடியும்’ என்பது.
அமலா பால் கொஞ்சம் வித்தியாசமானவர்… அதனால் தான் ஏற்கெனவே கிட்டத்தட்ட அந்த மாதிரி நடித்துவிட்ட ‘சிந்து சமவெளியை மறுபடியும் வெளியிடுங்கள்’ என்று கேட்கிறாராம்.
அமலாவின் இந்த விருப்பத்தைக் கேட்டபிறகு, அமலா பாலின் ‘சிந்து சமவெளி நாகரீக’த்தை பரப்பும் வேலைக்கு தயாராகிவருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்!
முன்னணி நடிகை ஜெனிலியாவின் திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் இன்று தொடங்கின.
நடிகை ஜெனிலியாவும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் பெற்றோர் எதிர்ப்பை மீறி பல ஆண்டுகள் காதலித்து, இப்போது அதே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். மணமகன் ரிதேஷ், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் என்பதால் வரும் பிப்ரவரி 4-ம் தேதி மும்பையில் மிக விமர்சையாக திருமணம் நடக்கிறது.
மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அங்குள்ள ஹயாத் ரீஜென்ஸி நட்சத்திர ஓட்டலில் அறைகள் மற்றும் அரங்குகளை மூன்று நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமகள் மெகந்தி அலங்கார நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (29-ந்தேதி) நடக்கின்றன. திருமணத்தையொட்டி நடிகர், நடிகைகளுக்கு ஜெனிலியாவும் ரிதேசும் இணைந்து விருந்து கொடுத்தனர். ஓட்டலில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் குடும்பத்தோடு வந்தார்கள்.
இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ஜெரினாகான், நேகா துபியா, ஜியாகான், சமீராரெட்டி, சுஷ்மாரெட்டி, பெராகான், அமிஷா படேல், நடிகர்கள் கரன்ஜோகர், ஜாயித்கான், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் ஜெனிலியாவுக்கும் ரிதேசுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். விருந்தில் ஜெனிலியாவும் ரிதேஷும் காதல் மகிழ்ச்சி பொங்க கைகோர்த்தபடி அனைவருக்கும் உபசாரம் செய்தனர்.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய தானே புயல், தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையை சின்னாபின்னமாக்கிவிட்டன.
இந்த புயலுக்கு 48 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் தற்போதுதான் ஓரளவு மீளத் தொடங்கியிருந்தாலும், சகஜ நிலை திரும்ப இன்னும் நாளாகும் என்கிறார்கள்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ஓரளவு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. தனியார் அமைப்புகள், கலைஞர்களும் தங்கள் பங்குக்கு உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் தானே புயல் நிவாரண நிதிக்கு தன் பங்குக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தார். இதையடுத்து அவர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், ‘என்ன திடீர் சந்திப்பு?’ என்று கேட்டதற்கு, “இதில் முக்கியம் எதுவும் இல்லை, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தானே புயல் நிவாரண நிதி கொடுக்க வந்தேன்,” என்றார்.
புதிய படம் குறித்த கேள்விக்கு, “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார் ரஜினி. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
உடல் நலம் தேறிய பிறகு ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை: கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.712 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 280 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.230 குறைந்துள்ளது.
அதாவது சவரனுக்கு ரூ 712 உயர்ந்து, 230 குறைந்துள்ளது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 104 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,638-க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.57 ஆயிரத்து 565 ஆகவும் ஒரு கிராம் ரூ.61-60 ஆகவும் உள்ளது.
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.
வேண்டுமென்றே தாமதப்படுத்த…
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், “வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது. 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கச் சொல்வது ஏன் என்பது புரியவில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குமூலம் பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கக் கோருவது சரியல்ல, இதுதொடர்பான அரசாணை ஏற்கத்தக்கதல்ல.
இந்த அரசாணையானது, அரசியல் சட்டத்தின் 173வது பிரிவை கேள்வி கேட்பதாக உள்ளது,” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: அதிமுகவிலிருந்து மேலும் சில சசிகலா உறவினர்கள் தூக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சசிகலாவின் அண்ணனும், நடராஜனின் தங்கையும் அடக்கம்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவிலிருந்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தான லட்சுமி, வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களிடம் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதில் சுந்தரவதனம் என்பவர் சசிகலாவின் அண்ணன் ஆவார். வைஜெயந்தி மாலா என்பவர் நடராஜனின் தங்கை ஆவார். சந்தான லட்சுமி, சசிகலாவின் அண்ணி ஆவார். அதாவது சுந்தரவதனத்தின் மனைவி.
சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் மகள் அனுராதா. இதில் வெங்கடேஷ் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். மகள் அனுராதாவைத்தான், டிடிவி தினகரனுக்கு கட்டிக் கொடுத்துள்ளார் சுந்தரவதனம்.
எதிரியான நண்பன்… குறி தவறிய வேட்டை… வெள்ளந்தியான கொள்ளைக்காரன்!
இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!
இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு!), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.
இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.
முதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 12 நாட்களைக் கடந்த நிலையில், சத்யம், ஐநாக்ஸ், பிவிஆர், ஏஜிஎஸ், அபிராமி என குறிப்பிட்ட மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இந்தப் படம் பரவாயில்லை எனும் அளவுக்குப் போகிறது. சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் ஒற்றை பெரிய அரங்குகள் பரிதாபமாக காற்று வாங்குகின்றன.
காரணம், மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிகபட்ச சீட் எண்ணிக்கை 300. குறைந்தபட்சம் 100. எஸ்கேப் சினிமாவில் ஒரு தியேட்டரின் மொத்த சீட் எண்ணிக்கை 120. இந்த தியேட்டரிலேயே போனதும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எளிதாக நண்பன் டிக்கெட் கிடைக்கிறது. சில நேரங்களில் ஃபுல்லாகிறது.
ஆனால் இது பெரிய விஷயமே அல்ல. சிங்கிள் ஸ்கிரீன் அரங்குகளான பிருந்தா, காசி, ஐட்ரீம் போன்றவற்றில் வார நாட்களில் மிகக் குறைந்த கூட்டமே.
நகருக்குள்ளேயே இந்த நிலை என்றால் புறநகர்களில் கேட்கவே வேண்டாம்.
நண்பன் வசூல் குறித்து தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை வெளியிடும் ‘தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்:
நண்பன் வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது என்பது மிகப் பெரிய பொய். இந்தப் படம் இன்னும் 30 கோடியைக் கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மை.
முதல் நாள் சுமாரான கூட்டத்துடன்தான் படம் வெளியானது. முதல் நான்கு நாட்களும் சராசரியாக ரூ 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்தது இந்தப் படம். அதன் பிறகு விழுந்துவிட்டது. நியாயமாக நல்ல விமர்சனம் வந்துள்ள நிலையில் இந்தப் படம் பெரிதாகப் போயிருக்க வேண்டும். ஆனால் நல்ல படம் என பாராட்டப்பட்டும், எதனால் கூட்டம் குறைந்தது என்பது ஆராய வேண்டிய சமாச்சாரம்.
சென்னையில் படத்துக்கு சுமாராக கூட்டம் வந்துவிட்டால் படம் ஜெயித்துவிட்டது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் நண்பன் வெற்றி, ரெக்கார்டு பிரேக் என்று கூவலாம். அடிவாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பஞ்சாயத்து வைக்கும்போதுதான் உண்மை புரியும்.
நண்பன் படத்தின் பட்ஜெட் ரூ 65 கோடி. இதில் பாதிக்கு மேல் வசூலித்தாலே பெரிய விஷயம்தான் என்பது இன்றைய நிலவரம். அடுத்த வாரம் மொத்த வசூல் விவரமும் வந்துவிடும். எங்கள் பத்திரிகையிலேயே தியேட்டர்வாரியாக வசூலை வெளியிடவிருக்கிறோம்,” என்றார்.
நீண்ட நாள் ஓட்டத்தின் அடிப்படையில் நண்பன் படம், சூர்யா நடித்த ஏழாம் அறிவின் வசூலைத் தொட்டாலே பெரிய சாதனைதான் என்கிறார் ராமானுஜம்.
எந்திரனுடன் ஒப்பீடு…
எந்திரன் வசூலோடு நண்பனை ஒப்பிடப்படுவது குறித்து ஒரு விநியோகஸ்தரிடம் கேட்டதற்கு, “முதலில் எந்திரன் வசூல் பற்றி இவர்களுக்கு ஏதாவது தெரியுமா… அந்தப் படம் முதல் நாளே ரூ 50 கோடிக்குமேல் வசூலித்தது உலகெங்கும். அப்படியிருந்தும்கூட இங்கு சில தியேட்டர்கள் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பியதும் நடந்தது. அந்தப் படத்துக்கு அதுதான் நிலைமை என்றால்… மற்ற படங்களையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?” என்றார் நம்மிடம்.
வேட்டை எப்படி?
தமிழ் ரசிகர்கள் யோசிக்கத் தெரியாதவர்கள் என்ற மாபெரும் நம்பிக்கையில் எடுத்த படம் வேட்டை என்கிறார் ராமானுஜம். என்னதான் பொழுதுபோக்கு என்றாலும், குறைந்தபட்ச லாஜிக் கூடவா வேண்டாம் என கேட்கிறார் அவர்.
இந்தப் படத்தின் வசூல் குறித்துக் கூறுகையில், “இந்தப் படத்தின் வியாபாரத்திலேயே நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரி, விற்றவர் – வாங்கியவரின் பிரச்சினை. படத்தைப் பொறுத்தவரை, இதற்கும் நண்பனுக்கு இணையான விமர்சனங்கள், ஆதரவு மீடியா உலகில் இருந்தது. குறிப்பாக இரண்டு பெரிய பத்திரிகைகள் இந்தப் படங்களை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல வரிந்து கட்டிக் கொண்டு தாங்களாகவே விளம்பரம் செய்து வந்தார்கள்.
அதுகூட இப்போது கைகொடுக்கவில்லை. வேட்டையால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ 10 கோடி வரை நஷ்டம் வரும் வாய்ப்புள்ளது,” என்றார் ராமானுஜம்.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத முக்கிய திரையுலகப் புள்ளி நம்மிடம் கூறுகையில், “நண்பன் பட வசூல் ட்ராப் என்பது உண்மைதான். ஓரளவு நஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது. மற்றபடி வெளியான பொங்கல் படங்களில் நண்பன் பரவாயில்லை என்பதுமட்டும்தான் ஆறுதல். ஆனால் வேட்டையால் பெரிய நஷ்டம். கொள்ளைக்காரன் தப்பான நேரத்தில் வந்து மாட்டிக் கொண்டது,” என்றார்.
இந்தப் பொங்கலுக்கு வந்த கிராமியப் படம். ஓரளவு யதார்த்தமான படம் என்று பாராட்டப்பட்ட கொள்ளைக்காரனை பெரிய பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
“உண்மைதான். காரணம் வேட்டை, நண்பன் தயாரிப்பாளர்கள் இந்த கொள்ளைக்காரன் வெளியாவதை ரசிக்கவே இல்லை. அவர்களின் மனசுப்படியே பத்திரிகைகள் நடந்து கொண்டன. நியாயமாக இந்த இரு படங்களையும் விட கொள்ளைக்காரன் தரமான படமே. ஆனால் ஓடவில்லை. காரணம் பெரிய படங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தில் இந்த கொள்ளைக்காரன் காணாமல் போய்விட்டது. தனியாக வந்திருந்தால் ஓரளவு தப்பு பண்ணாமல் போயிருக்க வேண்டிய படம் அது,” என்றார் ராமானுஜம்.
இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள்!
திருந்துங்க தயாரிப்பாளர்களே..
பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்ட கையோடு சில விநியோகஸ்தர்கள் சொன்ன இன்னொரு விஷயம், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் திரும்பத் திரும்ப இப்படி பொய் சொல்லி ஹீரோக்களைக் காப்பாற்றிவிடுகிறார்கள் என்பது. “இந்தப் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டால், ஹீரோவின் இமேஜும் உடையும், சம்பளமும் குறையும். ஆனால் அதைச் செய்யாமல் இப்படி தாங்கிப்பிடித்து மீண்டும் மீண்டும் குனிகிறார்கள்.. அப்புறம் புலம்புகிறார்கள்,” என்றனர்!
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸிஸ் பரவலாக பேசிக்கொள்ளப்படும் இன்னொரு முக்கியமான விஷயம், மௌனகுரு படம். “இந்தப் பொங்கல் ரிலீஸில் காணாமல் போய்விடும் என்று பலரும் நம்பிய படம் அருள்நிதி நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் வந்த மௌன குரு. ஆனால் ஆச்சர்யம், இன்னும் ஓரளவு ஸ்டெடியாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது..!” என்கிறார்கள்.
-நன்றி: தட்ஸ்தமிழ்
அலஹாபாத்: ஊழலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம், உண்ணாவிரதம் நடத்தி வரும் ஹஸாரே கோஷ்டியின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.
இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).
பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும் காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.
சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.
இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே!
இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் சாந்தி பூஷண் ரூ 1.35 கோடி முத்திரை வரி மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தி, அவர் இந்த தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மேலும் இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.
You can subscribe to News by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!
| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| « Nov | Feb » | |||||
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||