August 20th, 2012

இன்று ரமலான்...ஜெயலலிதா - கருணாநிதி - வைகோ உள்பட தலைவர்கள் வாழ்த்து!

இன்று ரமலான்…ஜெயலலிதா – கருணாநிதி – வைகோ உள்பட தலைவர்கள் வாழ்த்து!

Posted on 20 Aug 2012 at 11:25am

சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை…

‘இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் “ரம்ஜான்” திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும்.  முப்பது நாட்கள் பகலில் பருகாமலும் உண்ணாமலும் நோன்பு இருந்து,  தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவரைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டுமெனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி ரமலான் வாழ்த்துச் செய்தி:

“அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் வழங்கிய போதனைப்படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம், பகல்பொழுது முழுதும் நீர்கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்த அண்ணல் நபிகள் பெருமான், “இனத்திமிரை, ஜாதித் திமிரை, நிறத் திமிரை, குலத் திமிரை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்” என்று அன்றே சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களுக்காக வீரமுழக்கமிட்டவர். அவர், “எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கி விட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்” என்று மொழிந்தவர்.

அதுமட்டுமல்லாமல், “தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் அரசை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு” எனப் போதித்து
மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர்.

அவர் போதித்த மணிவாசகங்களை மனதில் பதித்து, எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக!”

மதிமுக பொதுச் செயலர் வைகோ வாழ்த்து செய்தி…

“பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியர்வர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ‘ஈதுல்’ பெருநாள் இந்நாள்.

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) சொன்ன அமுத மொழியைப் பின்பற்றி உருவமற்ற ஏக இறைவனை வணங்கியும், சகோதர சமயத்தாருடன் இணங்கியும் ஏழை எளியோர்க்கு வழங்கியும் வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்கவும், சமய நல்லிணக்கம் செழிக்கவும், வாழையடி வாழையெனத் தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தைப் பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளை இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்!”

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரம்ஜான் வாழ்த்து செய்தி:

“இசுலாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. இதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் ஒரு சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்.

இசுலாமியர்கள் சமூக, பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ளனர். அவர்களை முன்னேற செய்வது ஒரு முற்போக்கான அரசின் கடமையாகும். இன்று சிறுபான்மை இனத்தவராக உள்ள அவர்களுக்கு உரிய பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. அஸாமில் நடைபெற்ற கலவரமும், அதன் விளைவாக இதர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளும் கவலை அளிப்பதாக உள்ளன. இ°லாம் சமுதாயத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு அரசு மட்டுமல்ல, பெரும்பான்மையான சமுதாயத்தினரின் கடமையும் ஆகும். அந்த வகையில் வகுப்பு ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்ற அதே நேரத்தில், அனைத்து சமுதாயத்தினரும் ரம்ஜான் விழாவில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதன் மூலமே சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக குறைக்க முடியும். இதை வலியுறுத்தும் தே.மு.தி.க. சார்பில் பிறர்க்கு கொடுத்து உதவும் பெரும் பண்பை போற்றும் இசுலாம் மார்க்கத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்”.

அட்டகாசமான ஸ்விம் சூட்டில் சூட்டைக் கிளப்பும் கிம் கர்தஷியான்

அட்டகாசமான ஸ்விம் சூட்டில் சூட்டைக் கிளப்பும் கிம் கர்தஷியான்

Posted on 20 Aug 2012 at 11:11am

லாஸ் ஏஞ்சலெஸ்: கவர்ச்சிக்கும், எடுப்பான அழகுக்கும் பெயர் போன கிம் கர்தஷியான் இன்னும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எக்ஸ் வடிவிலான புதிய கவர்ச்சிகரமாக நீச்சல் உடையில் தோன்றி தனது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம்.

அமெரிக்க ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம்மைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை. ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு பிரளயத்தை ஏற்படுத்துவது கிம்மின் வழக்கம். அந்த வகையில், புத்தம் புதிய  எக்ஸ் வடிவிலான கவர்ச்சிகரமான நீச்சல் உடையை அணிந்து கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் கிம்.

இந்த நீச்சல் உடையில் கிம்மின் அழகுகள் முழுமையாக வெளிப்பட்டு புதிய பொலிவைக் காட்டுகிறது. 31 வயதான கிம், தற்போது ரேப் கலைஞர் கேயின் வெஸ்ட்டைக் காதலித்து வருகிறார். அவர்களது காதலை விட இப்போது கிம்மின் கலக்கல் நீச்சல் உடைதான் படு ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.

கிம் என்ன செய்தாலும் ‘கும்’முன்னுதான் இருக்கப்பா…!